அம்மன் பாடல் ( அணுவிற்குள் அணுவும் )

Image result for amman god

அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்
பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

Comments

  1. If you are going to copy songs from other blog posts then you should put credit at the bottom with writer's name and the link to the original post. It's not a good idea to copy other's work.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவன் பாடல் ( சிவமயமாக தெரிகிறதே )

சிவன் பாடல் ( அருணாசலனே ஈசனே )

அம்மன் பாடல் ( கற்பூர நாயகியே )